மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு

கோவை, டிச. 7: கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, நிரந்தர தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, நிரந்தர தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில், மழைக்காலத்தில், அவினாசி ரோடு மேம்பாலம் அடிப்பகுதி, காளீஸ்வரா மில் சாலை சந்திப்பு, லங்கா கார்னர் சந்திப்பு, கிக்கானி ரயில்வே பாலம் அடிப்பகுதி உள்பட பல முக்கிய இடங்களில் மழைநீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நிரந்தர தீர்வு காண்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பொறியியல் வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்பின்னர், கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.

மேலும், எந்தெந்த அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்கூட்டியே விரிவான திட்டமிடுதல் வேண்டும். மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அதிவேக மோட்டார்கள் பொருத்தி, தேங்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும். மழைநீரை வேறு இடங்களுக்கு திருப்பிவிட சாத்தியக்கூறு உள்ளதா என கண்டறிய வேண்டும்.     மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தலைசிறந்த கல்லூரி பொறியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து வல்லுனர் குழு அமைக்கப்படும். இக்குழுவில் யார், யார் இடம்பெறுவது என்பது குறித்தும், தொடர் நடவடிக்கைகளில் களம் இறங்குவது பற்றியும் அடுத்த வாரம் மீண்டும் ஆலோசிக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, இக்குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் பேசினார். கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, சூயஸ் திட்ட இயக்குனர் அமிர்த் நியோகி, மாநகராட்சி பொறியாளர்கள் ராமசாமி, பிரபாகர், ஆர்கிடெக்ட், தொழில்நுட்ப வல்லுனர்கள், தன்னார்வலர்கள், ஓய்வுபெற்ற பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: