ஊட்டி, டிச. 7: ஊட்டி படகு இல்லத்தில் வியாபாரம் செய்ய மாற்றிடம் ஒதுக்கி தர வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 26 கடைகளுக்கும், 48 பேருக்கு நகரும் வியாபாரம் செய்ய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. 26 கடைகள் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.நகரும் வியாபாரம் செய்வதை தவிர்த்து பார்க்கிங் பகுதியில் கடைகள் அமைத்து கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். பார்க்கிங் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படகு இல்ல வளாகத்தில் பார்க்கிங் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஊட்டி படகு இல்ல வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் அமைச்சரை சந்தித்து, கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே நாங்கள் வியாபாரம் செய்ய வசதியாக எங்களுக்கு படகு இல்ல வளாகத்தில் வேறு இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.