திண்டுக்கல், டிச. 7: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வந்து கலெக்டர் விசாகனிடம் மனு அளித்தனர். அதில், ‘திண்டுக்கல் மாநகராட்சி Y.M.R பட்டியில் கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் உள்ளது. இங்கு 3 அங்கன்வாடி மையங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இதில் ஒரு கட்டிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்கு இல்லாமல் மாறாக திண்டுக்கல் மாநகர் பகுதியிலுள்ள அங்கன்வாடிகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மற்றொரு கட்டிடத்தில் இயங்க வேண்டிய அங்கன்வாடி மையம் கென்னடி பள்ளியின் வகுப்பறையாக இயங்கி வருகின்றது. இதனால் மீதமுள்ள ஒரே ஒரு ஓட்டு கட்டிட அறைக்குள் 2 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இந்த அறையிலும் குழந்தைகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் பிற அங்கன்வாடி வழங்கப்பட வேண்டிய மேஜை, நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்களை குடோன் போல் குவித்து வைத்துள்ளனர். மேலும் சத்துணவு சமையல் கூடமும் அதே அறையில் இயங்குவதால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தான நிலை உள்ளது. எனவே அங்கன்வாடிக்கு கட்டப்பட்ட இடத்தில் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.