மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து போட்டிகள்
தோகைமலை, டிச.7: தோகைமலையில் நடந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சி தோகைமலை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தனமாலினி, ஒன்றிய கவுன்சிலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கை குறித்து பாடல், கட்டுரை, நாடகம், பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தர்மர், பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், மாற்றுதிறனாளிகள் களப்பணியாளர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.