×

ஊத்துக்கோட்டை அருகே வாந்தி, வயிற்றுபோக்கால் அவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு அமைச்சர் ஆவடி நாசர் நேரில் ஆறுதல்

ஊத்துக்கோட்டை, டிச.6: குடிநீர் குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அவதிப்பட்டு 3வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 28 பேரை அமைச்சர் ஆவடி நாசர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூரில் மேட்டு காலனி மற்றும் பழைய காலனி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள 2 குடிநீர் மேல்நிலை தொட்டிகளில் இருந்து ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில், நேற்று முன்தினம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட 65 பேரில் 28 பேர் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், லட்சிவாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களுக்கு கிராமத்திலேயே முகாமிட்டு  சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதில், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ளவர்களை, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர்களுக்கு பால், ரொட்டி, பெட்ஷீட் ஆகியவைகளை வழங்கினார். அப்போது, நல்ல முறையில் சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்புவார்கள் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் அவர் கூறினார். அப்போது, அமைச்சருடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், சுகாதாரதுறை இயக்குனர் ஜவஹர்லால், டாக்டர் பிரபாகரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதேபோல், திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் சென்று, பிரட், பிஸ்கட், பழங்கள், போர்வை உள்ளிட்ட நிவாரணப் உதவிகளை வழங்கி உடல் நலம் விசாரித்தனர். இந்த ஆய்வின்போது,  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக மாவட்ட பொறுப்பாளர்  திருத்தணி எம்.பூபதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர், அமைச்சர் நாசர் கூறியதாவது, `பேரண்டூர் கிராமத்தில் குடிநீரோடு மழைநீர் உள்ளிட்ட அழுக்கு நீரும் சேர்ந்துள்ளது. அந்த நீரை மக்கள் குடித்ததால்  வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு கலெக்டர் தலைமையில் 80 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமிட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ துறையைச் சேர்ந்தோர் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளும் நேரடியாக வழங்கி, கண்காணித்து வருகின்றனர். பேரண்டூரில் உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றுவது மற்றும் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு டிராக்டர் மூலம் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் அப்பகுதி மக்களுக்கு காலை, மாலை என இருவேளையும் வினியோகம் செய்யப்பட்டு சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் போட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு பணி செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தூய்மை பணியாளர்கள் கொண்டு குழு அமைத்து தூய்மைப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Minister ,Avadi Nasser ,Uthukottai ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு