மண்வள அட்டை பயிற்சி

காரைக்குடி, டிச.6: காரைக்குடி அருகே கல்லல் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மண்வள அட்டை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்தார். உதவி வேளாண்மை அலுவலர் வசந்தி, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விமலேந்திரன்,  வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் குருதாஸ், அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் மண்ணில் உள்ள களர், உவர், அமிலத்தன்மையை கண்டறிந்து அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்தல், மண் பரிசோதனை செய்வதால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நிலவரம் தெரிந்து அதற்கு ஏற்ப பயிர்களை பயிர் செய்வது குறித்து விளக்கப்பட்டது. தவிர களர்நிலம் சீர்திருத்தம் முறையில் இயற்கை உரங்களான தொழுஉரம், தழை உரங்கள் இடுவது, வடிகால் வசதி பெருக்குதல், சுண்ணாம்பு சத்து இல்லாத நிலத்திற்கு ஏக்கருக்கு 500 கிலோ ஜிப்சம் இடுதல் மற்றும் அமில நிலச்சீர்திருத்தம், உவர் நில சீர்திருத்தம் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. தமிழக அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மண்வள அட்டை, விவசாய தொழில்நுட்ப கையேடு, இலைவண்ண அட்டை வழங்கப்பட்டது.

Related Stories: