மதுரை, டிச. 6: நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ரயில்நிலையத்தில் நேற்று போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ரயில்வே போலீஸ் டிஎஸ்பி பொன்னுச்சாமி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் எஸ்ஐ சுந்தர்ராஜன் முன்னிலையில், போலீசார் ரயில்வே நிலைய பிரதான நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகளையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் முதல், இரண்டாம், மூன்றாம் நடைமேடைகளில் கண்காணிப்பை அதிகரித்தனர். மேற்கு நுழைவு வாயிலிலும் சோதனை தீவிரமாக நடந்தது. ரயில் நிலைய பகுதிகளை ரயில்வே போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.