போட்டி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி

ஈரோடு,டிச.6: போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திராவிடத்தமிழ் பேராசிரியர் கூட்டமைப்பின் அமைப்பாளர் கமலக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போட்டித் தேர்வுகள் அனைத்திலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு திராவிடத்தமிழ் பேராசிரியர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் 100 சதவீதம் நியமனம் செய்ய தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயமாக தமிழ்மொழி தேர்வு நடத்தப்படும்.

தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படும். தமிழ்மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் தேர்ச்சி கட்டாயம் என்றும் தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதரப் போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டது என்று தெளிவாக வரையறை செய்து தமிழர்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டியிருப்பதற்கு தமிழக அரசிற்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: