கேபிள் டிவி ஒயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கடலூர், டிச. 6: கடலூர் மஞ்சக்குப்பத்தில் கேபிள் டிவி ஒயரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சூர்யா என்கிற யுக பிரகாஷ் (29). கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கேபிள் டிவி ஒயரில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்காக கம்பத்தில் ஏறி ஒயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் இருந்து யுகபிரகாஷ் மீது மின்சாரம் தாக்கியதால் அவர் மின்கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மரக்கட்டை மூலம் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: