கோவில்பட்டி, டிச. 6: கோவில்பட்டி மெயின் ரோட்டில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி மெயின்ரோட்டில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. இப்பணிகளை இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, பத்மாவதி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.