நாகர்கோவிலில் வியாபாரியை மதுபாட்டிலால் குத்திய பள்ளி மாணவர்கள் 4 பேர் மீது வழக்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

நாகர்கோவில்,  டிச.6:   நாகர்கோவிலில் வியாபாரியை பாட்டிலால் குத்தி வயிற்றை கிழித்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அவ்வையார் காலனியை சேர்ந்தவர் கண்ணன் (39). பூ வியாபாரி.  நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தகராறு செய்துள்ளனர். இதை கண்ணன் கண்டித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக பள்ளி நிர்வாகத்துக்கும் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்துள்ளனர். இதனால் கண்ணன் மீது அந்த மாணவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

நேற்று முன் தினம்  மதியம் 2 மணியளவில் கண்ணன், மீனாட்சிபுரம் பத்தல்விளை பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 மாணவர்கள் வழி மறித்து தகராறு செய்தனர். இந்த தகராறின் போது மாணவர் ஒருவர், அங்கிருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து திடீரென கண்ணனின் வயிற்றில் குத்தி கிழித்தார். பின்னர் 4 மாணவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணனை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கண்ணன், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  பள்ளி மாணவர்கள் 4பேர் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341, 294 (பி), 324, 506 (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நடந்த விசாரணையில் 4 மாணவர்கள் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது. இவர்களில் பாட்டிலால் குத்திய மாணவரின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரது பெற்றோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மற்ற 3 மாணவர்கள் பற்றிய விபரமும் கிடைத்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: