தரங்கம்பாடி, டிச.6: தில்லையாடியில் உள்ள கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சாந்தாரைகாத்த சுவாமிகள் கோயில் உள்ளது. இங்கு அம்பாள் பெரியநாயகி அம்மன் தனி சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கோயில் உள்ளே நுழைந்து அம்மன் சன்னதியில் உள்ள உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். காலையில் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் இதனை பார்த்து உடனே பொறையார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தில்லையாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்டியலில் சுமார் 10 ஆயிரம் இருந்திருக்கலாம் என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.