கிருஷ்ணராயபுரம், டிச.6: கிருஷ்ணராயபுரம் அருகே மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் கிச்சாஸ் மார்சியலார்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமி இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியை சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். இதில் இளையோர் மற்றும் மூத்தோருக்கான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. கரூர் மாவட்ட அளவில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டிகளில் வெற்றி பெறும் நபர்கள் மாநில அளவிலான நடைபெறும் சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இப்போட்டியில் சிலம்பாட்ட மாஸ்டர் வீரமணி பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.