திருச்சி, டிச. 5: திருச்சி மாநகரில் உறையூர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் ஆகிய மூன்று இடங்களில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.9 லட்சம் மதிப்பில் ரேஷன் கடைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று புதிய ரேஷன் கடை கட்டங்களை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து உறையூர் கல்நாயக்கன் தெருவில் மாநகராட்சி பொதுநிதியில் ரூ.3.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் திறந்து வைத்தார்.