திருத்துறைப்பூண்டி, டிச.5: திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கழக மேலாளரை சந்தித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வைகையில் பேருந்து இயக்க எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை விடுத்ததையடுத்து கிளை மேலாளர் நடராஜன் திருத்துறைப்பூண்டியில் இருந்து ஆண்டாங்கரை வழியாக திருக்கொள்ளிகாடு தடத்தில் பேருந்து இயக்கி நடவடிக்கை எடுத்தார் இதற்கு மாணவ, மாணவிகள் எம்எல்ஏவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அரசு போக்குவரத்து மேலாளரிடம் எம்எல்ஏ மாரிமுத்து நேரில் சந்தித்து விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி மாணவ மாணவிகளை ஏற்றி வர வேண்டும். முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பெண்கள் பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பள்ளி விடும் மாலை நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும்.
மேலும் மங்களூர், கீழநம்ம குறிச்சி, மேலநம்மகுறிச்சி பெத்த வேளாண் கோட்டகத்தை சேர்ந்தவர்களின் போக்குவரத்து பிரச்னைகளை கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும். முத்துப்பேட்டை ஒன்றியம் குன்னலூர் மற்றும் எக்கல் ஊராட்சி பகுதி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 4 கிமீ. நடந்தே வந்து பாண்டி என்னும் இடத்தில் பேருந்து ஏறும் நிலை உள்ளது. இதனை போக்கிட ஏற்கனவே இயங்கி தனியார் மினி பஸ் நேரத்தில் மீண்டும் பேருந்து இயக்கிட வேண்டும்.ஆட்டூர், எழிலூர், மீனம்பநல்லூர், களப்பால், வேதபுரம் பகுதி பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாலை 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி வேதபுரம் வழிதடத்தில் போக்குவரத்து நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். இதையடுத்து உடனடியாக அம்மனூர் ஆண்டாங்கரை வழியாக திருகொள்ளிக்காடு வழிதடத்தில் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் எம்எல்ஏ மாரிமுத்து போக்குவரத்து கழக பணிமணை அலுவலகத்தில் இருந்து திருச்சியில் உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப மேலாளரிடம் போக்குவரத்து நேரம் தொடர்பாக உள்ள பிரச்னைகளை எடுத்துக்கூறினார். அம்மனூர் ஆண்டாங்கரை வழியாக திருக்கொள்ளிக்காடு வழித்தடத்தில் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எம்எல்ஏவுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.