கரூர், டிச.5: கரூர் மாநகராட்சி பகுதிகளில் பழைய மின்கம்பிகளை மாற்றி அதிக திறன்வாய்ந்த புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி நாளை முதல் வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறுவதால் அந்தந்த பகுதியில் காலை 8 மணிமுதல் பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக மின்வாரியத் துறை மூலமாக அப்போது மின் இணைப்பு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மின் கம்பிகள் மிகவும் பழமையானதாகும். குறைந்த மின் திறனை கடத்தும் கம்பிகளாக உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் பொதுமக்கள் மின்வாரிய துறையிடம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் மின்திறன் குறைவாக இருப்பதாலும் அதனை மாற்றி தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் கரூர் மாநகராட்சி பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றி புதிய சக்தியுள்ள மின்திறன் கம்பி அமைக்கும் பணி நாளை (6ம் தேதி) முதல் வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.