கடவூர் அருகே மரம் வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கடவூர், டிச.5: கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளுதண்ணிபட்டியை சேர்ந்த மொட்டையன் மகன் அங்கமுத்து (45). இவருக்கு கவிதா (37) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சிந்தாமணிபட்டி பகுதியில் அங்கமுத்து மரம் வெட்டும் கூலி வேலைக்கு சென்றுள்ளார். அங்கு தோட்டத்தில் வேலியில் உள்ள மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது மரம் ஒன்று அவ்வழியாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மேல் சாய்ந்தது. அதில் அங்கமுத்து மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சுய நினைவிழந்த அவரை அருகில் இருந்தவர்கள் மயிலம்பட்டி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அங்கமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: