மாணவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

ஓசூர், டிச.5: ஓசூரில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், புரோதுட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது அப்சல்(21). இவர் ஓசூர் ராம்நகரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து, கல்லூரியில் படித்து வந்தார். இவரை கடந்த அக்டோபர் 28ம் தேதி இரவு, வள்ளுவர் நகர் பகுதியில் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொலை செய்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிவசக்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ்(24) என்பவரை கடந்த 30ம் தேதி கைது செய்தார். இந்த கொலையில் தொடர்புடைய ராஜேசின் நண்பர் திலீப்குமாரை(21) தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்தனர்.

ஓசூர் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரும், சம்பவத்தன்று ஷேக் முகமது அப்சலை கடத்தி சென்றபோது, அவரிடம் பணமோ, செல்போனோ இல்லாததால் கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: