கிருஷ்ணகிரி, டிச.5: ஓசூரில் உள்ள கால்நடை பண்ணையில் வரும் 22ம் தேதி 40 கால்நடைகள் பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட மாட்டினங்களான கலப்பின ஜெர்சி 14, சிவப்பு சிந்தி 3, காங்கேயம் 12, ஆட்டினங்களான சேலம் கருப்பு ஆடுகள் 9, கொடியாடு 1 என மொத்தம் 40 கால்நடைகளை வரும் 22ம் தேதி காலை 10 மணியளவில் ஏலக்குழுவினர்கள் முன்னிலையில் பண்ணையின் பிரிவுகளில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்பணமாக ₹10 ஆயிரம் மதிப்பிலான வரைவோலையை DEPUTY DIRECTOR, DISTRICT LIVESTOCK FARM, HOSUR என்ற முகவரிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெற்று, மாவட்ட கால்நடை பண்ணையின் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி முன்பணத் தொகையானது வங்கி வரைவோலையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.