செம்மரம் வெட்ட ஆந்திரா சென்ற 2 தொழிலாளர்கள் சாவில் சந்தேகம்

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டம், சித்தேரியைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக ஆந்திராவில் 4 நாட்களாக கள ஆய்வு செய்து வருவதாக, மதுரை மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம், சித்தேரி மலைவாழ் மக்கள் செம்மரக்கட்டை வெட்டும் கூலி வேலைக்காக ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் இடத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா, பெண்கள் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாயகி, மற்றும் மோகன் ஆகியோர் ஆந்திராவில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, நேற்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி.அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு, எஸ்.பி. இல்லாததால் ஏடிஎஸ்பி குணசேகரனை சந்தித்து பேசினர். பின்னர், ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  தர்மபுரி மாவட்டம், சித்தேரி மலை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்(42) என்பவர் செம்மர கட்டை வெட்டுவதற்காக ஆந்திராவிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 27ம் தேதி இறந்த நிலையில் அவரது சடலம் ஊருக்கு அருகே வீதியில் வீசப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் சார்பில், சம்பவம் நடந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதிக்கு சென்று கடந்த 4 நாட்களாக கள ஆய்வில் ஈடுபட்டோம். ராமன் மட்டும் இறக்கவில்லை. அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பரும் தலை பிளக்கப்பட்டு இறந்துள்ளார். அதே ஊராட்சியைச் சேர்ந்த பலர் கொடூரமாக காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பின்னணியாக, அங்கிருக்கக் கூடிய ஆந்திர வனத்துறையினர், தமிழகத்தில் இருந்து கூலிவேலைக்கு சென்ற 45 பேரை விரட்டிச் சென்றுள்ளனர்.

ஆந்திர வனத்துறையினரிடமிருந்து உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக தப்பி ஓடிய பலர் காயமடைந்துள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். இதை நாங்கள் காவல் மரணம் என்றுதான் கூறுவோம். இதுதொடர்பாக தர்மபுரி ஏடிஎஸ்பியை சந்தித்து தெரிவித்துள்ளோம். இச்சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், தர்மபுரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சடலத்தை வாங்கவும், குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலகிருஷ்ணன் மரணத்தில் பல சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது சடலத்தை மனைவியிடம் காட்டாமல், ஆந்திராவிலேயே புதைத்து விட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற புரோக்கர்களை கைது செய்யவில்லை. இதுதொடர்பாக அறிக்கை தயாரித்து வருகிறோம். வரும் 6ம் தேதி எஸ்பியை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: