5,538 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு திட்டக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திட்டக்குடி, டிச. 5:  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் சந்திரன் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்  தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.  

 சிறப்பு அழைப்பாளராக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், வருவாய்த்துறை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், வளர்ச்சிப் திட்ட பணி கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், பள்ளி தாளாளர் கோடி ஆகியோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர், நெய்வேலி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 538 இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.   

 முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் 570 பேருக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கினார். 938 நபர்கள் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 101 இளைஞர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 272 நபர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். இதில் திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி, திட்டக்குடி டிஎஸ்பி சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, நகர செயலாளர் பரமகுரு, நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் மன்னன், திமுக பிரமுகர் தனபால், தொகுதி செயலாளர் கண்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணி விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி நன்றி கூறினார். 

Related Stories: