கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

கடலூர், டிச. 5: கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பழைய பிரசவ வார்டின் பின்புறம், நேற்று மதியம் உடல் அழுகிய நிலையில் சுமார் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.

இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த ஆண் சடலம் மிகவும் அழுகிய நிலையில் கிடந்ததால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து இங்கு வந்து வீசிவிட்டுச் சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: