விருத்தாசலம், டிச. 5: விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, நீர்நிலைகள் தூர்வாரி தருவதாக என்எல்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. ஆனால் என்எல்சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததால் ஆத்திரமடைந்த வடக்குவெள்ளூர், வெளிக்கூனங்குறிச்சி கிராம மக்கள் வருகின்ற 12ம் தேதி நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் என்எல்சி அதிகாரிகள் சிவகுமார், கணேசன் உள்ளிட்டோரும் வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் ரகுராமன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.