பரமக்குடி, டிச. 5: வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட மழைநீர் பரமக்குடி வைகை ஆற்றிலும், வலது இடது பிரதான பாசன கால்வாய்களில் திறந்து விடப்பட்ட நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் ஒன்றியங்களுக்குட்பட்ட வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொல்லனூர், சோமநாதபுரம், முத்தையாநகர், கங்கைகொண்டான், குமுக்கோட்டை, தினைக்குளம், கே வலசை, மந்திவலசை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
மேலும், மழைநீரால் அழிந்து போன விளை நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், பரமக்குடி தாசில்தார் தமீம் ராஜா, போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் கதிரவன், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.