கோவை, டிச. 5: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக பதுக்கி விற்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் கோவை மாநகரில் சுமார் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு ஷெட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உக்கடம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். 68 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனை செய்த வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் ரபீக்(42) என்பவரை கைது செய்தனர். மேலும் அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.