இரவில் கூவம் ஆற்றில் தவறி விழுந்தபோது 10 மணி நேரம் மரக்கிளையை பிடித்து தொங்கியதால் உயிர் தப்பிய வாலிபர்: காலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அண்ணாநகர், டிச.4: இரவில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த வாலிபர், அங்கிருந்த மரக்கிளையை பிடித்துக்ெகாண்டு 10 மணி நேரம் தொங்கியபடி இருந்தார். அவரை, காலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். கோயம்பேடு மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் புகழ் (28). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். மெட்டுக்குளம் கூவம் தரைப்பாலம் வழியாக நடந்து சென்றபோது, புகழ் கால்தவறி கூவம் ஆற்றில் விழுந்ததால், நீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அவர், நீச்சல் அடித்து கரை பகுதிக்கு செல்ல முயன்றார். ஆனால், நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், நீந்த முடியவில்லை. தொடர்ந்து போராடி ஒரு வழியாக கரையோரம் வந்து, அங்குள்ள முள் மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டார்.

பின்னர், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அலறி கூச்சலிட்டார். ஆனால், அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால், யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால், இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்து தொங்கியபடி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று காலை 7 மணி அளவில் அந்த பகுதி வழியாக மக்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அவர், மீண்டும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என ஒரு கையை அசைத்து அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுபற்றி கோயம்பேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் புகழை பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இரவு முழுவதும் அவர் தண்ணீரில் இருந்ததால் உடல் நடுக்கம் அதிகமாக இருந்தது. இதனால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த வாலிபர், மரக்கிளையை பிடித்து 10 மணி நேரமாக தொங்கி, உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: