புக்கத்துறை கிராமத்தில் சுடுகாடு செல்லும் சாலை விரைவில் அமைக்கப்படும்: ஊராட்சிமன்ற தலைவர் உறுதி

உத்திரமேரூர், டிச.4: உத்திரமேரூர் அருகே புக்கத்துறை கிராமத்தில் சுடுகாடு செல்ல சாலை அமைப்பதற்ாக இடம் ஆய்வு செய்யப்பட்டது. உத்திரமேரூர் - செங்கல்பட்டு சாலையில், மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.  இங்குள்ள கிராம  மக்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைந்துள்ளது. அந்த சுடுகாட்டுக்கு முறையான சாலை வசதி இல்லை. கிராமத்தில் யாராவது இறந்தால், உடலை எடுத்து கொண்டு, கிராம மக்கள் 2 கால்வாய்களை கடந்து, வயல்வெளியை தாண்டி செல்ல வேண்டிய உள்ளது. மழை காலங்களில், அந்த சாலையில், தண்ணீரில் மிதந்து கொண்டு சடலங்களை தூக்கி செல்லும் நிலை உள்ளது. அதேபோல், விளைநிலங்கள் வழியாக சடலங்களை தூக்கி செல்லும்போது பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்தனர்.

இந்நிலையில், சுடுகாட்டுக்கு பாதை வசதி அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற சொருபராணியிடம்,  கிராம மக்கள்  கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், நேரில் சென்று சம்பந்தப்பட்ட சுடுகாடு செல்லும் சாலையில் பார்வையிட்டனர். மேலும், விரைவில் சுடுகாட்டுக்கு செல்ல சாலை அமைத்து கால்வாய்கள் இடையே பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள், ஊராட்சிமன்ற தலைவர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். அப்போது, துணைத்தலைவர் சித்ரா உட்பட ஊராட்சி பிரதிநிதிகள் பலர் இருந்தனர்.

Related Stories: