செங்கல்பட்டு அருகே பாலாற்றின் நடுவே வெள்ளத்தில் அடித்து சென்ற குடிநீர் குழாய்கள்

செங்கல்பட்டு, டிச.4: செங்கல்பட்டு அருகே பாலாற்றின் நடுவே வெள்ளநீரில் குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டது. இதனால், குடிநீர் தங்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி, அதில் இருந்து உபரிநீர் வெளியேறியது. மேலும், பெரும்பாலான ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு அனைத்து நீர்களும் பாலாற்றில் சென்று கடலில் கலந்தது. இதனால், செங்கல்பட்டு பாலாற்றில் கடந்த 15 நாட்களாக பாலத்தை உரசியபடி வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதுவரை சிறிதளவுகூட தண்ணீர் குறையாமல் உள்ளது.

இதைதொடர்ந்து,  பாலாற்றில் ராட்சத மின்  மோட்டார் அமைத்து,  குடிநீர் குழாய்கள் மற்றும் கேபிள்கள் மூலம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, ஆற்றில் செல்லும் நீரின் வேகம் குறையாததால் மணல், செடி, கொடி, மரம் மட்டுமின்றி பாலாற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டு இருந்த கேபில் வயர்கள் மற்றும் குடிநீர் பைப், மின்மோட்டார் ஆகியவை நீரில் அடித்து சென்று, பாலத்தின் பாதுகாப்பு தூண்களில் சிக்கி கொண்டுள்ளன. இதனால், பாலாற்றை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.  கிராமங்களுக்கு லாரி மூலம், 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடப்படுகின்றன.  அதனால், இந்த தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடைந்த ஏரிக்கரையை

சரி செய்யவேண்டும்

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மேலேரிப்பாக்கம் பெரிய ஏரியின் கரை, சமீபத்தில் பெய்த தொடர் மழையால் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. இந்த ஏரிக்கரையை சரி செய்ய வேண்டும், பாடசாலை தெரு, பஜனை கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும். 60 ஆண்டு பழமையான பள்ளி கட்டிடத்தை அகற்றி, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதேபோல், ஊராட்சி மன்ற கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானதால், புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும் என திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசுவிடம், மேலேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பூபதி கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட அவர், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அப்போது, மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: