நாகர்கோவில், டிச.4 : முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளில் நேற்று பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 10 மணியளவில் நிர்வாக அலுவலக கட்டிடம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவக்கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து மருத்துவ பணிகளையும் பயிற்சி மருத்துவர்கள் புறக்கணித்தனர்.