தோகைமலை, கடவூர் அருகே பெட்டிக்கடைகளில் மதுபானம் விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

தோகைமலை, டிச. 4: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி ஊமைஉடையானூரை சேர்ந்த சாமிநாதன்(37), கொசூர் ஊராட்சி கொத்தமல்லிமேட்டை சேர்ந்த சுப்பன்(55), கள்ளை ஊராட்சி சுக்காம்மபட்டியை சேர்ந்த ரமேஷ்(35), கழுகூர் ஊராட்சி அ.உடையாபட்டியை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி (40). இவர்கள் தாங்கள் நடத்தி வரும் பெட்டிக்கடைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, அனுமதியின்றி விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தோகைமலை போலீசார் அந்தந்த பகுதிகளுக்கு சென்று சோதனை செய்தனர். பின்னர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சாமிநாதன், சுப்பன், ரமேஷ், மாரியாயி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கடவூர்: கடவூர் வட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மாமரத்துப்பட்டியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக சிந்தாமணிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அண்ணாத்துரை (55) என்பவர் பெட்டிக்கடையில் மது விற்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: