அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயில் கும்பாபிஷேக விழா
அருப்புக்கோட்டை, டிச. 3: இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருப்புக்கோட்டையில் பட்டாபிராமர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மும்மூர்த்திகளின் ஒருவரான திருமாலின் ராமஅவதாரத்தில் ராவணனை வதைத்து பிரம்மஹர்த்தி தோஷமடைந்தார். அந்த தோச நிவர்த்திக்காக அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வந்து சென்றதாக ஓர் ஐதீகம் இத்திருத்தலத்திற்கு உண்டு. இந்த பிரசித்தி பெற்ற பட்டாபிராமர் கோயில் கும்பாபிஷேகம் 30ம் தேதி சுதர்சன ஹோமம், சாந்தி ஹோமத்துடன் யாகசால பூஜை துவங்கியது. நேற்று காலை கோ பூஜை, புண்ணியகவாசனம், துவாரபூஜை, நான்காம் கால யாக பூஜையுடன் கும்ப புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இணை
ஆணையர் குமரதுரை, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் பரமசிவன், செயற்பொறியாளர் சந்திரசேகர், செயல் அலுவலர் தேவி, தக்கார் தேவி, ஆய்வாளர் பாஸ்கரன், முன்னாள் திமுக ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி உபயதாரராக அருப்புக்கோட்டை மகாஜனம் ராமசாமி அய்யர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.