திருப்புத்தூர், டிச.3: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குறிஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்காதேவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இருவரும் நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டினுள் உடைக்கப்பட்டு இருந்த பீரோ மற்றும் லாக்கர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதில் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் திருடு போனது தெரிய வந்தது.