ராமநாதபுரம், டிச.3: ராமநாதபுரத்தில் காரில் கொண்டு வந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை எஸ்ஐ குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் சேதுபதி நகர் அம்மா பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இது தொடர்பான விசாரணையில், ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் காரில் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதன்படி, ராமநாதபுரம் பாரதி நகர் விக்னேஸ்வரன்(34), சூரன்கோட்டை சங்கர்(30) ஆகியோரை கைது செய்து, 22கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமக்குடி சிறையில் அடைத்தனர். விக்னேஸ்வரன் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.