ஈரோடு, டிச.3: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் கடந்த ஏப்.23ம் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததையொட்டி கடந்த ஆக.23ம் தேதி முதல் அரசு உத்தரவின்பேரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி தியேட்டர் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுதொடர்பாக அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் (ஆர்டிஓ) சம்மந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர். இந்நிலையில், ஈரோடு மாநகரில் உள்ள ஒரு பிரபல தியேட்டர் கடந்த ஓராண்டாக உரிமத்தை புதுப்பிக்காமல் புதிய படங்களை திரையிட்டு வந்தது. இதையடுத்து உரிமத்தை புதுப்பிக்க கோரி எச்சரிக்கை நோட்டீஸ் ஈரோடு வருவாய் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது.