திட்டக்குடி, டிச. 2: ராமநத்தம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 29 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவரின் தந்தை நடராஜன் வயது முதிர்வு காரணமாக கொட்டாரம் கிராமத்தில் இறந்தார். இவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ம.புடையூர் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒரு வேனில் திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக அதே வேனில் வந்தனர். திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி குடிக்காடு அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற ஒருவர் மீது வேன் மோதியது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.