திண்டிவனம் அருகே ரேஷன் பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

திண்டிவனம், டிச. 2: திண்டிவனத்திலிருந்து  ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டிவனம் சந்தைமேடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன்  அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு,  நொளம்பூர் சாலை வழியாக அண்டப்பட்டு, ஏப்பாக்கம் கிராம ரேஷன் கடைகளுக்கு  லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, செஞ்சி ரோட்டை சேர்ந்த தேவபாலு(55) என்பவர் ஓட்டிச்சென்றார். முன்பக்கத்தில் சுமை தூக்கும் தொழிலாளி வேம்பூண்டியை சேர்ந்த திருமலை(57), உதவியாளரான செஞ்சி ரோட்டை சேர்ந்த கோடீஸ்வரன்(55)  ஆகியோரும், பின்பக்கம் மூட்டை மீது பட்டணம் கிராமத்தை சேர்ந்த முருகன்  (46), என்பவர் அமர்ந்து சென்றனர். கீழ்கூடலூர் ஏரிக்கரை வளைவில் சென்றபோது  எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி  ஓட்டுநர் வலது புறமாக லாரியை திருப்ப முயன்றார்.

அப்போது லாரி ஓட்டுநரின்  கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரத்தில் உள்ள ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மேலே அமர்ந்து வந்த முருகன் மீது மூட்டைகள் சரிந்தது. அதில் காயமடைந்த அவரை பொது மக்கள் மற்றும் ஒலக்கூர் காவல்துறையினர் மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரிசி,  பருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஏரி நீரில் சரிந்து கிடந்தது. அதனை  நுகர்வோர் வாணிபக்கழக ஊழியர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: