மயிலாடுதுறை, டிச.2: மயிலாடுதுறை கடைவீதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை குறித்து விழிப்புணர்வு துண்டு அறிக்கை ஒட்டுதல் பணியில் மாவட்ட எஸ்பி சுகுணாசிங் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம், மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் கொண்ட துண்டறிக்கையை மயிலாடுதுறை நகரின் பல்வேறு இடங்களில் மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் தலைமையில், காவலர்கள் பொதுமக்கள் படிக்கும் வகையில் சுற்றில் ஒட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்திருட்டு, கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 94426 26792 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவித்தால் தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் யாரிடமும் பகிரப்படமாட்டாது, நேரில் வரவேண்டாம் உண்மையான தகவல் மட்டும் தெரிவித்து காவல்துறைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என எஸ்.பி. கேட்டுக்கொண்டார். மேலும் பள்ளியிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கும் வகையில் பள்ளிக்கு அருகில் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி சென்றனர். மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், மகாதேவன் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.