திருமுருகன்பூண்டி, டிச.2: திருப்பூர் 15 வேலம்பாளையம் அடுத்துள்ள சோளிபாளையம் செல்லும் பிரதான மெயின் ரோட்டில் உள்ள பாரதி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் பாஜ கட்சியில் மாவட்ட நெசவாளர் அணியில் தலைவராக உள்ளார். நேற்று காலை இவர் தனது வீட்டின் முன்புறம் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த 2 மரங்களை வேரோடு வெட்டிவிட்டார். முழு மரத்தையும் பொக்லைன் எந்திரத்தை கொண்டு இழுத்து மரங்களை வேரோடு வெட்டி எடுத்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அவர் எங்களுக்கு எந்த மனுவும் கொடுக்கவில்லை. மரம் வெட்டவும் எங்களிடம் ஆட்கள் இல்லை. இது குறித்து விசாரிக்கிறேன்’’ என்றனர். வெட்டிய மரங்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. சாக்கடை கால்வாய்க்கு முன் உள்ள ரோடு அரசுக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் இருந்த மரங்களை அரசு அனுமதியில்லாமல் வெட்டக்கூடாது. அதையும் மீறி வெட்டியதை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், மண்டல அலுவலக உதவி ஆணையருக்கும் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.