கோவை-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து மீண்டும் துவங்கியது

கோவை, டிச.2:  கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு 21 மாத இடைவெளிக்குப் பிறகு பேருந்து சேவை  துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. கேரளாவில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இரு மாநிலங்கள் இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில் தமிழக அரசு நேற்று முன்தினம் தமிழகம் -கேரளா இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, நேற்று காலை முதல் கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கேரள மாநில பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில் சேவை மட்டுமே கேரள மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், கேரளா செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: