ஈரோடு, டிச.2: பவானி பண்டாரப்பச்சி கோயில் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் (39) என்பவரை கைது செய்தனர். இதேபோல பவானி மேற்குதெரு மாரியம்மன் கோயில் அருகில் மது விற்ற சரவணன் (43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடத்தூர் போலீசார் நடத்திய சோதனையில்,காசிபாளையம், சந்தைக்கடை அருகில் மது விற்ற காசிபாளையம், கிருஷ்ணாநகர் பாஸ்கரன் (32), எலத்தூர் கருப்பணன் (60) ஆகிய இருவரையும் கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு கனிராவுத்தர் குளம் அருகில் மது விற்றதாக வீரப்பன்சத்திரம், நெப்போலியன் வீதியை சேர்ந்த பழனிகுமார் (38) என்பவரை கைது செய்த ஈரோடு வடக்கு போலீசார், அவரிடமிருந்து 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.