தாம்பரம் : சித்த மருத்துவத்தின் தந்தையும், 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகஸ்திய முனிவர் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாள் ஆண்டுதோறும் தேசிய சித்தா தினமாக கொண்டாடப்படும் என 2017ம் ஆண்டு ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆயில்ய நட்சத்திரம் டிசம்பர் மாதம் 23ம் தேதி வர உள்ளது. இதனால் அன்றைய தினம் 5வது சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் துவக்க விழா நேற்று தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு சித்தா தினத்திற்கான கவுண்ட் டவுனையும், மழைக்கால சித்த மருத்துவ முகாம் இயங்கும் வாகனத்தையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சித்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மீனாகுமாரி, தாம்பரம் அரசு மருத்துவமனை தலைவர் பழனிவேல் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.