முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் கூறியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பர் மாதம் தான் நீட் தேர்வு நடந்தது. பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. நீட் தேர்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் கலந்தாய்வு நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 2,500 பேர் உட்பட இந்தியா முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முதுநிலை படிப்புகளில் சேர்ந்திருப்பார்கள். முதுநிலை படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் வராததால், ஏற்கனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பணி சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: