டிரைவர் மண்டை உடைப்பு

பூந்தமல்லி: வீட்டின் எதிரே வாகனம் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் டிரைவரின் மண்டையை உடைத்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் பாபு (எ) செல்வம் (34), டிரைவர். இவரது வீட்டின் எதிரே கடந்த ஒரு வாரமாக ஒரு வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை நேற்று முன்தினம் இரவு ஒருவர் எடுக்க வந்தார். அப்போது, வீட்டின் எதிரே எதற்கு இத்தனை நாட்கள் வேனை நிறுத்தி வைத்தீர்கள் என பாபு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த நபர், தனது கூட்டாளிகளை அங்கு அழைத்து வந்து, வீட்டில் இருந்த பாபுவை சரமாரியாக தாக்கினார். மேலும், அங்கிருந்த டேபிள் மின்விசிறியை, பாபுவின் தலையில் தாக்கிவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனர். இதையடுத்து குடும்பத்தினர், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: