தொண்டி, டிச.1: தொடர் மழை காரணமாக திருவாடானை,தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்துள்ளது. குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து கண்மாய் மற்றும் குளங்களும் நிரம்பி விட்டது. ஆற்றுப்பகுதிகளில் வெள்ளம் அதிகமாக செல்கிறது. பல இடங்களில் தரைப்பாலத்தின் மீது அதிகளவில் தண்ணீர் செல்கிறது. கன மழையின் காரணமாக திருவாடானை அருகே உள்ள தோட்டாமங்கலம் சிறு வண்டலை சேர்ந்த பழனியாண்டி வீடு, மச்சூர் முகமது அலி, தெற்கு ஆண்டாவூரணி முருகன் ஆகியோரின் வீடுகள் இடிந்து விட்டது.