கோபால்பட்டி, டிச. 1: சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளில் தடுப்பணை ஏதும் கட்டாததால் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் குளங்களுக்கு செல்லாமல் உப்பாறு, குடகனாற்றில் சேர்ந்து, கடலில் கலந்து வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் அஞ்சுகுழிப்பட்டி கிராமத்தில் சங்கிலியான் கோயில் அருகே சங்கிலியான் அணை கட்டப்பட்டது. 30 அடியுள்ள இந்த தடுப்பணையில் சிறுமலை பகுதியில் பெய்யும் மழைநீர் தேங்கும். தற்போது தொடர் மழையால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இந்த தடுப்பணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதன்மூலம் 30 குளங்கள், 50 கிராமங்கள் பாசன வசதி பெறவுள்ளன. இதற்கிடையே மறுகால் பாயும் சங்கிலியான் தடுப்பணை தண்ணீரில் நேற்று திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் பஞ்சாயத்து தலைவர் ராஜா சீனிவாசன், துணை தலைவர் ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.