கலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்

மன்னார்குடி, ஏப்.23: ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான ஏப்.23ம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், தமிழகத்திலும் உலக புத்தக தின கொண்டாட்டத்துக்கான ஏராளமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் அனைத்து வார்டுகளிலும் அறிவொளி வாசிப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23ம் தேதி) காலை பொதுமக்களை திருக்குறள் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்தியாவிற்கான மக்கள் இயக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இயேசுதாஸ் கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காத காரணத்தால் ஆன்லைனில் பாடம் படிக்க குழந்தைகள் கையில் செல்பேசிகள் வந்தடைந்தன. அது படிப்படியாக “கேம்”களில் ஆரம்பித்து இன்று பல குழந்தைகள் செல்லிலேயே ஆழ்ந்து கிடக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெற்றோர்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்த சூழலில் செல்பேசிகளின் இத்தகைய கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வாசிப்பு பழக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துமாறு அறிவொளி வாசிப்பு இயக்கம் பெற்றோர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நம் குழந்தைகளுக்கு ரசனையும் அறிவும் மிக்க புத்தகங்களை பெற்றோர் வாங்கித் தர வேண்டும். செல்போன் கலாச்சாரத்தில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். இதனை உலகப் புத்தக தினமான இன்று (ஏப்.23) அனைத்து பெற்றோர்களும் தொடங்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று 23ம்தேதி என்று காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்குறள் கல்வி அதிகாரத்தில் முதல் ஐந்து குறள்களை மன்னார்குடி நகரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வீடுகளில் இருந்தபடி கூட்டாக வாசிக்க வேண்டும் என்று அறிவொளி வாசிப்பு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. அதை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். அன்று தங்கள் வீட்டு வாசல்களில் திருக்குறள் கோலமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 10 நாட்களாக மன்னார்குடி நகரம் முழுவதும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி நகரின் 33 வார்டுகளிலும், 25 ஆயிரம் வீடுகளில் 70 ஆயிரம் பேரை நேரில் சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மன்னார்குடி அறிவொளி வாசிப்பு இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீடுகள் தோறும் சிறு நூலகம் ஏற்படுத்துதல் வாசகர் வட்டம் அமைத்தல் ஆகிய நீண்ட கால நோக்கங்களுக்காகவும் வாசிப்பு இயக்க தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவிலேயே பல்லாயிரக்கணக்கான வீட்டு நூலகங்களைக் கொண்ட அறிவுசார் நகரம் என்ற பெருமையை மன்னார்குடி நகரம் எட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: