மன்னார்குடி, ஏப்.23: ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான ஏப்.23ம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், தமிழகத்திலும் உலக புத்தக தின கொண்டாட்டத்துக்கான ஏராளமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் அனைத்து வார்டுகளிலும் அறிவொளி வாசிப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23ம் தேதி) காலை பொதுமக்களை திருக்குறள் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்தியாவிற்கான மக்கள் இயக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு முயற்சியில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இயேசுதாஸ் கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காத காரணத்தால் ஆன்லைனில் பாடம் படிக்க குழந்தைகள் கையில் செல்பேசிகள் வந்தடைந்தன. அது படிப்படியாக “கேம்”களில் ஆரம்பித்து இன்று பல குழந்தைகள் செல்லிலேயே ஆழ்ந்து கிடக்கிறார்கள். இதனால் குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெற்றோர்களும் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்த சூழலில் செல்பேசிகளின் இத்தகைய கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வாசிப்பு பழக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துமாறு அறிவொளி வாசிப்பு இயக்கம் பெற்றோர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.