×

தஞ்சையில் இருந்து கோதுமை மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

அரியலூர்,ஏப்.23: தஞ்சையில் இருந்து கோதுமை மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார். அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கருணா (26) லாரி டிரைவர். இவர் நேற்று மாலை தஞ்சாவூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து 600 கோதுமை மூட்டைகளை ஜெயங்கொண்டம் பகுதி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய லாரி மூலம் ஏற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி அரியலூர் மாவட்டம் விளாங்குடியை கடந்து சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெறும் சூழ்நிலையில் எதிரே வந்த வாகனத்திற்க்கு வழிவிடும் விதமாக லாரியை அதிவேகமாக திரும்பியுள்ளார். இதில் லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் கருணா படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாங்குடி ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகளை மாற்று லாரியை ஏற்பாடு செய்து கோதுமை மூட்டைகளை ஜெயங்கொண்டம் அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...