×

கடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர், ஏப்.23:  திருப்பூரில் மனைவி, நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்து அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் போயம்பாளையம் அடுத்த அவிநாசி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (33). இவர், அதே பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த அவரது  நண்பரான அசோக் என்பவருக்கு சரவணன் வேறு ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சரவணன் பலமுறை அசோக்கிடம் கேட்டுள்ளார்.ஆனால், நீண்ட நாளாகியும் அசோக் அந்த பணத்தை சரவணனுக்கு திருப்பி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அசோக் திடீரென சரவணனிடம் நான் உன்னிடம் பணம் வாங்கவே இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், சரவணன் அதிர்ச்சியடைந்ததுடன், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த சரவணன், தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். இதனையடுத்து, அசோக்கிற்கு பணம் வாங்கி கொடுத்தது தொடர்பாகவும், அதை அவர் திரும்ப கொடுக்காதது குறித்தும் சரவணன் வீடியோவாக பதிவு செய்து, தனது மனைவி கல்பனா மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். பின்னர், வீட்டில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Watts ,
× RELATED இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி....