×

பாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரித்யன் கிரிதரன், அயனாவரத்தை சேர்ந்த சுவேதா ஆகியோர், கடந்த 2 மாதங்களுக்கு முன் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், பாலிசி எடுக்க சென்றனர். அங்கு, அந்நிறுவன ஊழியர் பால்ஜோசப் மூலம் இருவரும் தலா ரூ.52 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தனர். அப்போது எங்கள் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் கட்டிய பாலிசி பணத்திற்கு ஏற்ப கடன் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் கோடம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு சென்ற அவர்கள், ஊழியர் பால் ஜோசப்பை அணுகி, எங்கள் இருவருக்கும் கடன் வழங்க வேண்டும், என்றனர்.

அதற்கு ஊழியர், பாலிசி எடுத்து 2 மாதத்தில் கடன் கொடுக்க முடியாது, என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரித்யன் கிரிதரன் மற்றும் சுவேதா, நாங்கள் கட்டிய பாலிசி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர், செலுத்திய பாலிசி பணத்தை உடனே தர முடியாது, என்று கூறியுள்ளார். இதனால், இருவரும் ஊழியர் பால்ஜோசப்பை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்து, காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பிரனவை தொடர்பு கொண்டு, நாங்கள் கட்டிய பாலிசி பணத்தை எங்கள் வங்கி கணக்கில் செலுத்தினால்தான், உங்கள் ஊழியரை திரும்ப ஒப்படைப்போம், என்றுள்ளனர்.

அதன்படி பிரித்யன் கிரிதரன் மற்றும் சுவேதா ஆகியோர் வங்கி கணக்கிற்கு பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் திருப்பி அனுப்பியது. ஆனாலும் ஊழியர் பால் ஜோசப்பை விடுவிக்காமல் ஒரு குடோனில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து மேலும் ரூ.1 லட்சம் கேட்டு மேலாளரை மிரட்டியுள்ளனர். பிறகு வேறு வழியின்றி சம்பவம் குறித்து தனியார் இன்சூரன்ஸ் மேலாளர் பிரனவ் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்துகொண்ட பிரித்யன் கிரிதரன் மற்றும் சுவேதா ஆகியோர் பால்ஜோசப்பை நேற்று முன்தினம் நள்ளிரவு தேனாம்பேட்டை சிக்னல் அருகே காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு தப்பினர்.
பின்னர் பால்ஜோசப்பை மீட்ட போலீசார், கடத்தல் குறித்து பெண் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...