கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளிக்க 1000 செவிலியர்களை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில், சங்க தலைவர் ஏழுமலை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் தொடரும் விபத்துகளில் காயமடைந்த நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 1500 செவிலியர்கள் தேவைப்படும் சூழ்நிலையில், 135 செவிலியர்களை வைத்து கொண்டு, ஓய்வு இல்லாமல் பணிபுரிவதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனை, தமிழக அரசு கருத்தில் கொண்டு உடனடியாக குறைந்தபட்சம் 500 முதல் 1000 செவிலியர்களை நியமித்து, செவிலியர்களின் பணி சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், நேற்று முதல் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வது, 26ம் தேதி கண்டன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினர்.

Related Stories: